முதுமையில் தவிப்பு
ஆசிரியர் திரு.நாகப்பன் ...சித்தப்பாவை எனக்கு மற்ற சித்தப்பாக்களைப் போலவே சில விசயங்களில் ரொம்பப் பிடிக்கும்.இவர் என் மூன்றாவது சித்தப்பா..சென்னை நந்தனம் டக்கர் பாபா பயிற்சிப் பள்ளியில் படித்தவர்.பாப்பிரெட்டிபட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.சேலத்தில் இருந்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய சென்றவர் அங்கேயே நிலம் வாங்கி வீடு கட்டி தன் வாழ்நாளை செய்வனே கடத்தியவர் .மகன் சங்கர்.... லண்டனில் பணிபுரிவதால்..... குடும்பத்தோடு இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக லண்டனில் வசித்து வருகிறார். மகள் ஆத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது கணவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர். நாகப்பன் சித்தப்பாவை நான் சந்திக்கும் நிகழ்வுகள் ஒரு சில வினாடிகள்..அல்லது ஒரு சில நிமிடங்கள் தான் இருக்கும் ...அந்த நேரத்தில் ஒரு சில விசயங்களைச் சொல்லி என் மனதை கவர்ந்து விடுவார் .. ஒரு சில...புத்தகங்களை படிக்கும் போது அதன் முடிவு....நம் மனதை கவர்ந்துவிடும்...உதாரணம்....சில நேரங்களில் சில மனிதர்கள்...இந்தக் கதையின் முடிவு...அடா... அடா ....அந்தப் பாவி... இவள் வாழ்க்கையை அலங்கோலப்படுத்தி விட்டானே.... என்றும் ....திரைப் படங்களில் கிளைமாக்ஸ்.. மூன்றாம்பிறை. ச்சே....அவளுக்கு சுய நினைவு..வந்து இவனை மறந்து விட்டாளே ... என்றும்... செல்லமாய் வளர்த்த வீட்டு நாய்..வீட்டிற்குள் நுழைந்த விஷ ஜந்துவை கடித்துக் கொன்று..அதன் விஷக் கடியில். தன்னுயிர் நீத்த நிகழ்ச்சியும்....மேலும் ..... அவர் சொன்ன ஓர் விசயம்....ஒரு நாள் ஆறுமுகத் தாத்தா...சேலத்தில் இருந்து பஸ் ஏறி பகல் நேரத்தில். பாப்பி ரெட்டிபட்டிக்கு வந்துள்ளார்.வெளியே வராண்டாவில் உட்கார்ந்து சித்தப்பா நாகப்பனிடம்....நலன் விசாரித்து பேசிக் கொண்டு இருக்கும் போது...மிகவும் ஆசையுடன் வளர்த்து வந்த சேவல் ஒன்று தாத்தாவின் கால் ஓரமாகச் சென்று சிறகடித்து..கொக்... கொக் ....கோ .. என்றுக் கூவி பறந்துச் சென்று அருகில் இருந்த தோட்டத்தில் ஓடியிருக்கிறது ...அதைக் கவனித்த தாத்தா ..மெல்ல சிரித்துக் கொண்டு.....என்னடா இது..இந்தக் கோழி..என் காலை சுற்றி ஓடுகிறது என்று...வாயில் இருந்த வெற்றிலைக் கலவையோடு சிறிது புகையிலையை கடித்துக் கொண்டே அந்தச் சேவலையே பார்த்துக் கொண்டு.... மேலும் சிறிது கசப்பையும் எடுத்து.... கொஞ்சமாக முன் பல்லில் சொரண்டிக் கடித்து . குதப்பி மெள்ள ஆரம்பித்து இருக்கிறார் ... இதையே கவனித்த நாகப்பன் சித்தப்பா... என்னப்பா...அந்த கோழியவே பார்க்கறிங்க ... என்று வினவ . தாத்தா சொன்னாராம்...என் காலை இந்தக் கோழி ஏம்ப்பா..வந்து தடவி.. கோ..... என்றுக் கூவி ஓடுது... யார் ஊட்டுக் கோழி அது என்று .... தானே மீண்டும் சிரித்துக் கொண்டே கேட்டாராம்....தாத்தாவின் சிரிப்பின் அர்த்தம் சித்தப்பா விற்கு புரியவில்லை......அப்போது அவருக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் ...கோழி நான் தாம்ப்பா ...வளர்க்கிறேன்...நம்பக் கோழிதான் என்றாராம்...பிறகு...சரிப்பா நான் போயி.. ஆட்டுக் கறி வாங்கி வருகிறேன் என்றுச் சொல்லி பாப்பி ரெட்டி பட்டி பஸ் ஸ்டண்ட் அருகில் இருக்கும் கறி கடைக்கு சென்றாராம். செல்லம்மாச் சித்தி ....தாத்தாவுக்கு பிடித்த ராகிக் களி செய்து ..ஆட்டிக் கறி வறுவல் செய்து...சுடச் சுட பரிமாறி இருக்கிறார்...அதைப் பார்த்த தாத்தா....சாப்பிட மறுத்துவிட்டாராம்... ஏனென்றுக் கேட்டதற்கு ... கோழி என் காலில் அடித்து விடை சொல்லிட்டுப் போச்சு...அதை அடித்து கொழம்பு செய்யாம... ஆட்டு கறி செஞ்ச்சா நான் எப்படி சாப்பிட முடியும் என்று கோபப்பட்டாராம். .அது வளர்க்கர கோழிப்பா..அதனாலதான்...என்று கையை பிசைந்தாராம் சித்தப்பா..சரி ...சாப்பிடுங்க என்று சமாதானப் படு த்தி தாத்தாவை சாப்பிட வைத்து ...செலவுக்கு பணம் கொடுத்து பஸ் ஏற்றிச் சேலம் அனுப்பி வைத் தார்களாம் .. பாப்பி ரெட்டி பட்டியில் இருந்து தாத்தா சேலம் வந்து ஒரு வாரம் கூட ஆகி இருக்காதாம்...அந்த சேவல் .. வெளியே ரோட்டில் ஒரு டூ வீலரில் அடிப்பட்டு இரண்டு கால்களும் நசுங்கிவிட் டதாம்.. சித்தப்பாவுக்கு பகிர் என்று ஆகி விட்டதாம்...என்ன சோதனை இது...அப்பா ..இந்தக் கோழி குழம்புக்கு ஆசைப்பட்டு இருப்பார் போல இருக்கு...அதைப் புரிந்துக் கொள்ளாமல்...நாம் தப்பு செய்து விட்டோம் என்று...வருந்தி....உடனே அந்தக் கோழியை சமைத்து... முழுக்க எடுத்துக் கொண்டு பஸ் ஏறி சேலம் வந்து..நடந்ததைச் சொல்லி...அப்பா. சாப்பிடுங்க என்று வேண்டி இருக்கிறார்...தாத்தா அதை நான் சாப்பிட மாட்டேன்...என்றுச் சொல்லி இருக்கிறார். ஏம்பா .....என்றதற்கு ..ரோட்டில் அடிப்பட்டக் கோழியை நான் எப்படி சாப்பிட முடியும்...என்றுச் சொல்லி... வேண்டாம் எடுத்துக் கொண்டுப்போ..என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டாராம் ..ரோட்டில் அடிப்பட்ட கோழி சாக வில்லை..அதன் கால்கள் தான் நசுங்கி விட்டன ..அதனால் என்னப்பா...சாப்பிடுங்க...என்று... மிகவும் மனம் ஒடிந்து கேட்டு இருக்கிறார் சித்தப்பா.ஆனாலும் தாத்தா அந்த கோழிக் குழம்பை சாப்பிட மாட்டேன் என்று சொல்லி மறுத்து விட்டாராம் ..... அட..அடா...அப்பா சொன்னதை ..சரியாக புரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே.. பெத்த தகப்பனுக்கு இல்லாத கோழி ...எதுக்கு...என்பதை உணர்ந்து...அப்பா . .நான் நீங்க சொன்னத சரியாகப் புரிந்து கொள்ளாமல் தப்பு செய்து விட்டேன் .என்னை மன்னித்து விடுங்கள் என்று கைக் கூப்பி வணங்கிவிட்டு...வீடு திரும்பி இருக்கிறார் சித்தப்பா..வீடு சேரும் வரை அவருக்கு பொங்கி பொங்கி அழுகை வந்து இருக்கிறது... பெத்த தகப்பனா...இல்லை வளர்க்கும் கோழியா...எதுப் பெரிது...எதற்கும் அழாதவர் சித்தப்பா ...அன்று அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது என்றால்...பாசம் ... பாசம்..பெற்றவரின் மீது கொண்ட இரத்தப் பாசம்....
.இப்படி.....அவர் சொன்னவை என் நினைவில் நின்று இரண்டு மூன்று நாட்களுக்கு நீந்திக் கொண்டு இருக்கும்.அவரை சந்திக்கும் போது... பெயரைச் சொல்லி சுருக்கமாக அழைப்பார்..மகனே என்பார்...கண்ணு என்பார்...தம்பி என்பார்.. ...சாமி என்பார்..மகன் நலமா...படிப்பு எப்படி இருக்கிறது என்பார்...பாசத்தோடு வலது கை விரல்களைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நசுக்கி .. தோள் வரை கையின் சதைகளை பிடித்து நசுக்கிப் பிடித்து விடுவார்..என் கையின் பலத்தைத் தான் சோதிக்கிறார் என்று நினைத்து கையின் சதை நரம்புகளை இறுக்கி என் பலத்தைக் காட்டுவேன். தோள் பட்டையில் இருந்து கையை இறக்கிப் பிடித்துப் பார்த்து ..கையின் இறுக்கத்தைப் உணர்ந்து ...கையை வெளியே எடுத்துக் கொள்வார். மெல்ல சிரித்து விட்டு ...அப்புறம் .. எப்படி.,...போய்கிட்டு இருக்கு..என்று வினவுவார்.என் நிலையைச் சொல்லும் பொழுது..இவ்வளவு செலவு பண்ணி.. கஷ்டப்பட்டு இப்படி ஒரு படிப்பு படிக்கத்தான் வேண்டுமா.. இது தேவைதானா... படிச்சாத் தான் சம்பாதிக்க முடியுமா.. படிக்க வில்லை என்றால் இந்த உலகில் வாழ முடியாதா.. படிக்காதவங்க யாரும் வாழலியா...இப்படிக் கேட்டு விடுவார்...என்ன ஒரு சிந்தனையை தூண்டும் கேள்வி......சிந்திக்க வைக்கும் கேள்வி ..சில நாட்கள் என்ன... சில மாதங்கள் கூட நினைவில் நின்று விடும். திரும்பத் திரும்ப கண்முன்னே வந்து ஆடும். தம்பி சங்கர்.. பிளஸ் டூ முடித்து விட்டு கல்லூரி சென்று படிக்க வேண்டும்..எந்த பட்டப் படிப்பை தேர்வு செய்வது என்பதில்... சித்தப் பாவுக்கும் தம்பி சங்கருக்கும்...இடையே குழப்பம்... சித்தப்பாவிற்க்கு.... பிஎஸ்சி கெமிஸ்ட்ரி...படிப்பில் சேர்க்க வேண்டும் என்று விருப்பம்..ஆனால்...தம்பி சங்கருக்கோ...பேச்லர் இன் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்க ஆசை... இதைத் தான் படிக்க வேண்டும் என்று சித்தப்பா சொல்ல...அதை நான் படிக்க மாட்டேன் என்று தம்பி அடம் பிடிக்க...இருவருக்கும் வாக்குவாதம்.. இதைத்தாங்க முடியாத சித்தி... செல்லம்மா சின்னம்மா..நம்ம குடும்பத்துல படிச்சுட்டு...இப்ப வேலையில இருக்கறவங்களை கேளுங்க...என்று சொல்ல...சித்தப்பா.. சித்தி.. தம்பி சங்கர்..தங்கை ஆகியோர்... பாப்பி ரெட்டிப் பட்டியில் இருந்து சேலம் வந்து ..என் இரண்டாவது சித்தப்பா திரு. மாதப்பன்.. போர்மேன்.. மத்திய ஆட்டோ மொபைல் ஒர்ஷாப் அஸ்தம்பட்டியில் பணியாற்றும் அவர்களை சந்தித்து...விளக்கம் கேட்டனர்..ஏனென்றால் ..எல்லோராலும் செல்லமாக..குழந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மாதப்பன் சித்தப்பாவின் மகன்கள்.. ஒருவர்...இராமமூர்த்தி...MA BL..சட்டமும்..இன்னொருவர் ..MBBS மருத்துவமும் மகள் டெக்ஸ்டைல் டெக்னாலஜி யும்...மற்றவர்களும் படித்துக் கொண்டிருந்த காரணத்தால்...பிள்ளைகளை தொடர்ந்து படிக்க வைத்துக்கொண்டு இருந்த ..அந்த அனுபவ சூழலில் இருந்த ...குழந்தை சித்தப்பாவை சந்தித்து .....என்ன படிப்பு படிக்க வைக்கலாம் என வழிகாட்டுதல் பெற வந்தனர்.அதற்கு குழந்தை சித்தப்பா... தன் தம்பியின் விருப்பப்படி படிக்கச் சொல்வதா...மகன் சங்கரின் விருப்பப்படி படிக்கச் சொல்வதா..என்ன சொல்வதென்று புரியாமல்...சரி... இந்த காலத்து படிப்பு அவ்வளவுக்கு எனக்குத் தெரியாது...பெரியண்ணன் ... மிலிட்டரி அண்ணனின் மகனிடம் போய்க் கேட்போம்.. . என்றுச் சொல்லி ...என் வீட்டிற்க்கு அனைவரையும் அழைத்து வந்தார் . ..... என்னை சந்திக்கும் பொழுதெல்லாம் .ஒரு சில சித்தப்பாக்கள்..இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவிப்பார்கள்..நானும் என் அம்மா முத்துலட்சுமி அவர்களும் ...கை எடுத்து கும்பிட்டு..வாங்க..என்று..வரவேற்போம்..பிறகு நலம் விசாரிப்பு .. தேநீர் ..உபசரிப்பு முடிந்து..... செல்லும் போதும் கைக் கூப்பி வணக்கம் தெரிவித்து விடை பெறுவார்கள் ...நீண்ட நாட்களாகவே எனக்கு இது மனதில் ஒரு உறுத்தல்...அம்மா இந்த வீட்டின் பெரிய மருமகள்....பெரிய அண்ணி....மூத்த மருமகள்...முதல் மருமகள்..அதனால் தான்...அம்மாவோடு இருக்கும் போது என்னை... கைக் கூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்களோ...தனிப்பட்டு கவனிக்கும் பொழுது...அம்மா இல்லாமல் தனியாக இருக்கும் போதும்..என்னை சித்தப்பாக்கள் இவ்வாறு வணக்கம் செய்விக்கிறார்களே...என்று எனக்குள் ஒரு..... ஏன் என்றக் கேள்வி எழுந்து இருந்தது. நான் வயதில் சின்னவன்..உறவில் மகன்...எதனால் இந்தப் பழக்கம் இன்றும் தொடர்கிறது ... இதற்கு விடை தேடிக் கொண்டிருந்தேன் ... வீட்டிற்கு வந்தவர்கள்....வாசலில் நுழையும் போது.....எப்பவும் வழக்கம் போலவே..நாகப்பன் சித்தப்பா அம்மாவையும் என்னையும் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டார்...நாங்களும் கைக் கூப்பி வணங்கி வரவேற்றோம்...வந்தவர்களுக்கு வேண்டிய உபசரிப்பைக் கொடுத்து...திடீரென அவர்கள் அனைவரும் குடும்பத்தோடு வந்த... விசயம் அறிய ஆவல் கொண்டோம்...குழந்தை சித்தப்பா ..தம்பி சங்கரின்.. அந்த படிப்பு விசயத்தை சொல்லி முடிக்கும் முன்பே..சித்தப்பா நாகப்பன்... உரத்தக் குரலில்... ஏம்பா...பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்தால்...நிறைய வேலை வாய்ப்பு இருக்கு...எங்கு வேண்டுமென்றாலும் உடனடியாக வேலைக்குச் செல்லலாம்... பிசிஏ ..ஒரு புதுபடிப்பு...அந்த படிப்புக்கு இங்கு இன்னும் வேலை வாய்ப்பு உருவாக வில்லை என்று...உறுதியாகச் சொன்னார்...அனைவரும் அமைதியாக இருந்தனர்.. நான்....தம்பி சங்கரை பார்த்து... ...என்னப்பா...படிக்கிற...என்று கேட்டப் பொழுது. .அண்ணா..என் விருப்பம் புது படிப்பு படிக்க வேண்டும்... பிசிஏ படிக்கிறேன்..அதுதான் என் ஆசை என்று தலைக் குவிந்தவாறு மெது... மெதுவாய்ச் சொன்னார்....பின்னர் எல்லோரும் என் முகத்தையே பார்த்தனர்..நான் என்ன சொல்லப் போகிறேன் என்று...நான் நிலை மையை புரிந்துக்கொண்டு.... பிஎஸ்சி கெமிஸ்ட்ரி ஒரு நல்ல படிப்புத்தான்...ஆனால்...வருங்காலத்தில்...உலகமே கம்யூட்டர் சைன்ஸ் யை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது...தம்பியின் விருப்பப்படி பிசிஏ படிக்க வைக்கலாம்...இன்னும் ஐந்து ஆண்டுகள் எம்சிஏ படித்து வரும் போது...தம்பிக்கு வேலை வாய்ப்பு நிறையக் கிடைக்கும்..அந்தப் படிப்புக்கு வேலை இந்தியாவில் கிடைக்க வில்லை என்றால் வெளிநாடுகளில் கிடைக்கும்...தம்பிக்கு வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றேன் ....அதுவரை தரையை நோக்கி பார்த்துக் கொண்டு இருந்த தம்பி ...தலை தூக்கிப் பார்த்தார்.முகத்தில் என்ன ஒரு ஆனந்தம்... அனைவரின் முகத்திலும் சிரிப்பு .அலையென எழ ஆரம்பித்தது.. ஒவ்வொருவரும் புத்துணர்வோடு .பார்க்க ....அழகாகத் தெரிய ஆரம்பித்தனர்..சித்தப்பா..நாகப்பன் ...முகத்தில்...சுருக்கம்.. வாடிப் போனது.மெதுவாக..என்னைப் பார்த்து..அப்படி ..யாப்பா..அதையே படிக்கச் சொல்லலாமா..என்று...யாருமே தனக்கு உதவாத நிலையில் தவிப் பதுப் போல ..கம்மியக் குரலில் ....கேட்டார். ஆம்ப்பா...தம்பி விருப்பப் படியே படிக்கட்டும்..அந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று தைரியப் படுத்தினேன்.சோர்ந்து போன.. அவர் முகத்தை பார்க்கும் போது எனக்கு....சோகம் மனதை சூழ்ந்து கொண்டது..அவர் ஆசைப் படி மகனை படிக்க வைக்க முடிய வில்லையே ...பெற்றத் தந்தையின் ஆசைக் கனவு உடைந்து அங்கும் இங்குமாக சிதறி விட்டதே.என்று உள்ளம் உருகிப் போனது..என்ன செய்வது ...கல்வியின் எதிர் காலம் மிக முக்கியம் அல்லவா...விடை பெற்றப் போது நாகப்பன் சித்தப்பா கைக் கூப்பி விடை பெற்றார்.பதிலுக்கு நாங்களும் கை எடுத்துக் கும்பிட்டு வழி அனுப்பினோம்...வெளியே வந்து வீதி முடியும் வரை நாகப்பன் சித்தப்பா மவுனமாக தளர்ந்த நடையுடன் அவர்களுடன் சென்றார். இது போன்ற ஒரு நிகழ்ச்சி...குழந்தை சித்தப்பாவின் மகன் தம்பி ரவீந்திரன். .பிளஸ் டூ முடித்து...மேல் படிப்பு படிக்க ....படிப்பை தேர்வு செய்த போது... 1983-84 ல்...குழந்தை சித்தப்பாவும்..தம்பி ரவியும் சேலத்தில் இருந்து மேட்டூர் கெமிக்கல்ஸ் காலனிக்கு எங்கள் வீட்டிற்க்கு வந்தார்கள்.என் அப்பாவிடம்...தம்பி ரவி படிக்கத் தேர்வு ஆகி இருந்த படிப்புகளை ஒவ்வொன்றாக கொடுத்தார்கள்...சென்னை ஐஐடி.... MBBS... மெடிக்கல்... BDS...BVSc...BE..in sona college in Salem....இந்தப் படிப்புகளை பார்த்த அப்பா..ஒவ்வொன்றும் நல்ல படிப்புதான் என்றும்..இதில் மெடிக் கல் நன்றாக இருக்கும் என்றார்...அண்ணா..இதில் ஐஐடி படித்தால் ..வெளிநாடு போகலாம் என்று குழந்தை சித்தப்பா குதூ கலத்துடன் அப்பாவிடம் சொன்னார்..நான் சொன்னேன்...நம் குடும்பத்தில் பிறந்தவர் யாரும் இன்னும் ஒருவர் கூட மருத்துவர் ஆக வில்லை..நம் குடும்பத்தின் முதல் மருத்துவர் தம்பி ரவியாக இருக்கட்டும் என்றேன்...என் தந்தையார் சொன்னது போலவே மெடிக்கல் எடுத்துப் படிக்கச் சொன்னேன்.நாட்கள் நகர்ந்தன...நாற்பது ஆண்டுகள் ஓடியும் இன்னும் எங்கள் குடும்ப வாரிசில் எவ்வளவோ முயன்றும்...எங்கெங்கோ பள்ளிகளை தேர்ந்து எடுத்து படிக்க வைத்தும்.. பயிற்சிக்காக எவ்வளவோ பணம் செலவிட்டும் யாரும் மெடிக்கல் படிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை..
சென்ற ஆண்டு தான்..தம்பி டாக்டர் ரவியின்....(தற்போது ..சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் சீனியர் சர்ஜன்) இரண்டு புதல்விகளும் MBBS மருத்துவம் படித்து வருகிறார்கள்..இதை ஏன் சொல்கிறேன் என்றால்... வாய்ப்பு...கிடைக்கும் போது அதை சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.வாய்ப்பு திரும்பத் திரும்ப வராது. திடும் என வரும் அதை உடும்பென பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படி விருப்பப் பட்டு படித்தவர்கள்...விருப்பமில்லாமல் படித்தவர்கள்....பட்டம் பெற்று...தங்க ளின் படிப்புக்கு ஏற்ற வேலையை உள்ளூரில் பெற முடிவதில்லை . வேலைத் தேடி வெளியூர்.. வெளிநாடு செல்ல வேண்டியதாகிறது ....தம்பி சங்கர் MCA படித்து வேலைக்காக....லண்டன் சென்று விட்டார்.... அவரின் மனைவியும் மகளும் அவருடன் லண்டனில் வாழ்கிறார்கள் . தற்போது தம்பி சங்கரின் மகள் அங்கே மருத்துவம் படித்து வருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால்..நாகப்பன் சித்தப்பாவும் சித்தியும் காரில் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.வந்தவர்கள்...கையில் பை நிறைய ஆப்பிள்...மாதுளை ..ஆரஞ்சு...பழங்களை கொண்டு வந்து ...அன்போடு கொடுத்தார்கள்.அசைவ உணவு சமைக்க ஏற்பாடு செய்யட்டுமா..என்றதுக்கு... வேண்டாம் சைவம் போதும் ...அப்பாவுக்கு உடம்பு சரியில்லை...மருந்து எடுத்துக் கொள்கிறார் என்று சித்தி சொன்னார்.என் துணைவியார் அவர்கள் கேட்டுக் கொண்ட படியே சைவ உணவு தயாரிக்கத் தொடங்கினார்.சாப்பிடும் போது சித்தப்பா சொன்னார்...பெரிய அண்ணி சமைத்ததுப் போலவே ..சுவையாக இருக்கிறது ...அண்ணியின் கை பக்குவம் அப்படி இருக்கும் ..சித்தி சொன்னார்...எங்கே வதக்கிய கத்திரிக்காய் குழைந்து போய் இருக்குமோ என்று நினைத்தேன்...பதமாகத் தான் செய்து இருக்கிறாய் என்று என் துணைவியாரை பாராட்டி சாப்பிட்டு முடித்தார்கள். தம்பி...உன்னிடம் ஒரு சில விசயங்களை பேச வேண்டி இருக்கிறது..என்று ஆரம்பித்தார் சித்தப்பா.....என் பெரிய அண்ணன் மிலிட்டரி முத்துசாமி போல...உன்னை நான் மதிக்கிறேன்..உன்னை நான் பார்க்கும் போதெல்லாம் என் அண்ணனைப் பார்ப்பது போலவே இருக்கிறது..என்னுள் ஒரு மரியாதை எழுகிறது.என்று இரு கை எடுத்து கும்பிட்டார் .நானும் கை கூப்பி வணங்கினேன்.அவர் கண்கள் கலங்கின...நீண்ட நாட்களாக என் மனதை நெருடி கொண்டு இருந்த .. ..என்னைப் பார்த்து சில சித்தப்பாக்கள் கும்பிடுவதற்க்கான காரணம் இப்போது விளங்கியது.அண்ணனை பார்ப்பது போலவே நீயும் இருக்கிறாய்..அண்ணனுக்கு தரும் மரியாதையை...எனக்குத் தருகிறார்கள் போல.....என்பதை புரிந்துக் கொண்டேன்...சித்தப்பா மேலும் தொடர்ந்தார்...அண்ணன் மிலிடரி போன பிறகுதான் நாங்கள் ஒரு நல்ல டிரஸ் அணிந்தோம்...எங்களை சென்னையில் படிக்க சேர்த்து விட்டவர் அண்ணன்தான். உன் அம்மா ...பெரிய அண்ணி..உரலில் நான்கு வள்ளம் சோளம் குத்தி சோறாக்கி எங்கள் பதினாறு பேருக்கும் உருண்டைத் தட்டி மூங்கில் தாங்கடையில் போடுவார்..பெரிய அம்மா.. உன் பெரிய ஆயா...அனைவருக்கும் பங்கிடுவார்... அண்ணி அந்த சோள சோறுக்கு ஏற்றவாறு குழம்பு சமைப்பார்...நாங்கள் மீதியான குழம்பை .. வழித்து விரல் சூப்பி சாப்பிடுவோம்.அது போல பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் அண்ணி சமைக்கும் அந்த சுவையை சுவைத்துச் சாப்பிட்டேன்.உன் துணைவியார் அண்ணியிடம் நன்றாக சமைக்க கற்றுக் கொண்டு உள்ளார்.. என்றுப் பாராட்டினார் ...ஆமா... கண்ணு..முருங்கைக் காய் சாம்பாரும்...கத்தரிக்காய் வதையல் நன்றாக இருந்தது..இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிச் சாப்பிட்டேன் என்று சித்தி .சிரித்தபடியேச் சொன்னார்....பின்னர் சித்தப்பா..நான் ஒரு பகுத்தறிவு கொண்ட... கம்யூனிச வாதி...சொல்லப் போனால்.ஒரு நாத்திகன். சாதி.. மதம்..இனம்...மொழி..நிறம் ...சடங்கு..சம்பிரதாயம்... மூட பழக்க வழக்கம்...நல்ல நேரம். கெட்ட நேரம்..சகுனம்....இவைகளில் ஈடுபாடு இல்லாதவன்...சாமி கும்பிடுவதில்லை...திரு நீறு வைப்பதில்லை..குடும்ப ஒற்றுமைக் காக குலதெய்வத்தின் தெவம்.பூஜை.....போன்ற நிகழ்ச்சிகளில் வந்து கலந்துக் கொள்வேன்...உறவு முக்கியம் என்பதற்காக தவறாமல் ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்வேன்...செலவுக்கு கேட்ட பணத்தைக் கொடுத்து விடுவேன் ...கடைசியில் செலவு போக மீதி என்ன என்று கணக்கும் கேட்பேன்...இது நிறைய பேருக்கு என் மீது கோபத்தை ஏற்படுத்திவிடும்.இதனால் மன கசப்பும் .. வெறுப்பும் உறவுகளு க்கிடையே உண்டாகி விடும்.நான் வேண்டாதவனாகி விடுவேன்....ஆனால் என்னால் எதையும் தெரியாமல் விட்டு விட முடியாது... கேள்வி கேட்டு அதை தெரிந்துக் கொண்டுத் தான் போவேன் ..இது என் குணம்..இயல்பு என்றார்.. ஆமா.... கண்ணு... உங்க அப்பாவுக்கு எங்கப் போனாலும் இதே தான் வேலை... போனமா..வந்தமா ன்னு இல்லாம...அது என்ன இது என்ன என்று கேள்வி கேட்டு...அவங்களை கலக்கி விட்டுத் தான் வருவார் என்று சொல்லிச் சிரித்தார் சித்தி...சித்தப்பா மேலும் சொன்னார்... தம்பி..உன்கிட்ட எனக்குப் பிடித்தது....சொல்றத பொறுமையா கேட்டு அதற்க்குத் தகுந்த பதில சொல்ற...அதனால உன்கிட்ட இன்னும் நிறைய சொல்லனும்னு தோணுது .என்று மேலும் சொல்ல ஆரம்பித்தார்... தம்பி ..உன் மனைவியும் என் மனைவியும் ஒரே ஊர்க்காரங்க.. வாழப்பாடிக்கு முன் உள்ள இரயில்வே கேட்டுக்கு முன்னாடி இருக்கும் முத்தம்பட்டி தான் ...இவுங்க இரண்டு பேரும் பிறந்து வளர்ந்த இடம்.சுமார் அறுபது வருடத்துக்கு முன்னாடி உன் சித்தியை கல்யாணம் பண்ணிக் கிட்டு வந்தேன் . கிட்டத் திட்ட ..உன் மாமனார் குடும்பமும் நம் குடும்பமும் சுமார் எண்பது வருட உறவு கொண்டது.நம்ப சொந்த ஊர்..நம்ப பூர்வீகம் ...கஞ்சமலைக்கு..முன்னால் ... சித்தர்கோவில் எதிரே இருக்கும் முருங்கப்பட்டி...இந்த வாழப்பாடி முத்தம்பட்டிக்கும் நம்ப முருங்கப் பட்டிக்கும் உள்ள உறவு..மூன்று தலை முறைக்கும் மேலான அன்யோன்ய உறவு.ஆன்மீகத்தால் உண்டான உறவு. ஆன்மீக உறவு என்றால்.. கஞ்சமலையில் அமைந்து இருக்கும் சித்தர் கோவில் மிக பிரசித்தி பெற்றக் கோவில்.ஒவ்வொரு அமாவாசைக்கும் ..பஸ் போக்கு வரத்து இல்லாத காலத்தில் .... வாழப்பாடி...முத்தம் பட்டியில் இருந்து... ...வெறும் காலால் ..நடைப் பயணமாக ....நடந்தே வந்து... சித்தேஸ்வரனை .தரிசித்து...பயணக் களைப்பு அடங்க ... எதிரே இருந்த முருங்கப்பட்டி ஶ்ரீ மாரியம்மன் கோவிலின் திண்ணை மீது... கொண்டு வந்த இருந்த கட்டுச்சோறு ..புளிச் சோறு..புளியோதரை...சாப்பிட்டு...அப்படியே குடும்பத்தோடு படுத்து ஓய்வு எடுத்து ...நடந்து வந்ததால் முழங்கால் வரை வீங்கிய வீக்கத்தை போக்க...அருகில் இருக்கும் நம் தாத்தா வீட்டில் சுடு நீர் வாங்கி ....ஒத்தடமும் குளியலும் போட்டு விடை பெறுவார்கள்...அப்படி ஏற்பட்டக் உறவுதான் ....முத்தம் பட்டிக்கும்..முருங்கப்பட்டிகும் உருவானது....நம் தாத்தா வீட்டில் முரு ங்கபட்டியிலும்... உன் மாமனாரின் பாட்டி முத்தாளுவின் வீட்டில் முத்தம் பட்டியிலும் ....நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ...இந்த இரு வீட்டார் இல்லாமல் நடந்தது இல்லை.ஒரு வாரம்..ஒரு மாதம் என ஒவ்வொரு வீட்டிலும் தங்கி இருந்து ..அந்த வீட்டின் நிகழ்சிகளை நடத்தி முடித்துக் கொடுத்தப் பிறகு தான் அவரவர் வீட்டிற்க்கு இருவீட்டாரும் பிரிந்து செல்வார்கள்.... அப்படிப் பட்ட இந்த இரண்டு குடும்பங்களின் உறவு விட்டுப் போய் விடக் கூடாது என்பதால் தான்.... தாத்தா ஆறுமுகம்...எனக்கு இந்த ஊரில் இருந்து பெண் எடுத்தார்....அதுமட்டுமல்ல..உன் அக்கா ராஜம்மாவை...உன் மாமனார் செல்லையாவின் தம்பி ஜெயராமனுக்கு நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்...அதன் பிறகு...நீயும் அந்த வீட்டில் இருந்து பெண் எடுத்துக் கிட்டே என்றுச்....சொன்னவர்...இதனால் ...இந்த இரண்டு குடும்பங்களின் உறவும் இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. எப்பொழுதும்.. ஒரு சில நிமிடங்களே பேசும் சித்தப்பா..இன்று இவ்வளவு நேரம்..குடும்ப வரலாறு ...அதன் உறவுகள்...நிகழ்வுகள்... என்றுச் சொல்லி வருவது எனக்கு வியப்பாக இருந்தது.மேலும் சொன்னார்...தம்பி.. எனக்கும்... உன் சித்திக்கும் ...வயசு ஆகிக் கொண்டே போகிறது..உடம்பும் அடிக்கடி சரியில்லாம போகிறது...வைத்தியம் பார்க்கிறோம்...மருந்து மாத்திரை சாப்பிடறோம்..என்ன சாப்பிட்டு என்ன பண்றது...மனசு சரியில்லையே...மனசுல ஒரு சந்தோசம் இல்லையே...என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்...அவர் முகத்தில் ஏற்பட்ட அந்த உடனடி மாற்றம்... வேதனையைத் தந்தது.......என்னப்பா இப்படி சொல்றிங்க...மகன் லண்டன் ல கை நிறைய சம்பா திக்கிறார்...மகள் அரசுப் பள்ளி ஆசிரியர்....நல்ல ஒரு நிலையில் தான் இருக்கிறார்கள் ..உங்களுக்கு என்னக் குறை..சந்தோஷத்துக்கு ஏதுக் குறை என்றேன்.குறை எதுவும் இல்லை...ஆனால் மன நிம்மதி..மன அமைதி...இல்லையே என்றார்.பிள்ளைகளைப் பெற்று..வளர்த்து...படிக்க வைத்து...திருமணம் செய்து வாழ்க் கையில் செட்டில் செய்து..அவர்கள் குழந்தை குட்டிகளோடு...வாழ்வதை இந்த வயதான காலத்தில் பார்ப்பதில் தானே... மனதிற்கு ஒரு மகிழ்வு.... பேரக் குழந்தைகளோடு கொஞ்சி...கெஞ்சி விளையாடுவதில்தானே .. மனதிற்கு ....ஒரு பெருமை..ஒரு நிறைவு....ஆனால் மகள் வெளியூரிலும் மகன் வெளி நாட்டிலும் இருந்தால்...எங்களுக்கு எப்படி இருக்கும்...வயதான காலத்தில் பெத்த பிள்ளைகள் இருந்தும் ...பக்கத்துல யாரும் இல்லாத ...பயத்தோடு தான் ... நாளை ஓட்டுகிறோம்....கல்யாணம் ஆனப்போது ...நாங்கள் எப்படி இரண்டுப்பேரும் தனியா இருந்தோமே அப்படித்தான் ..இப்பவும் பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கியப் பிறகும் நாங்க இரண்டு பேரும்...தனியாத்தான் தனிமையை உணர்கிறோம்....என்று . பெரு மூச்சு விட்டார்...பிறகு. வாழ்க்கையில எவ்வளவோ கடந்து வந்தாச்சு...இன்னும் எவ்வளவு நாளோ ..நடக்கட்டும்....ம் ...சரி... தம்பிக் கிட்ட இன்னைக்கு ரொம்ப நேரம் பேசிட்டேன்...நிறைய பேசிட்டேன்.. ரொம்ப நாளா மனசில தம்பிக் கிட்ட சொல்லனும்னு இருந்தது..சொல்லிட்டேன்....இது கொஞ்சம் தான் ..இன்னும் இருக்கு ...அப்புறமா ஒரு நாளைக்கு சொல்றேன்...என்று கைக் கூப்பி விடை பெற்றார்...வீட்டிற்க்கு ஒரு நாளைக்கு வாங்க சாமி..என்று சித்தி ஆசையோடு வேண்டிக் கொண்டார்.கைக்கூப்பினோம்... கார் புறப்பட்டது..அப்போது...என் துணைவியார் கண்களை துடைத்துக் கொண்டது... என் கண்களில் கண்ணீரோடு தெரிந்தது . எட்டிக் குதித்து ஓடும் நாட்களை எப்படி பிடித்து நிறுத்த முடியும்.இரண்டு ஆண்டுகள் எங்கேயோ போய் ஒளிந்துக் கொண்டன. ஒரு நாள்..நாகப்பன் சித்தப்பாவிடம் இருந்து போன் வந்தது...எடுத்தேன்...நலம் விசாரித்தவர் ..இந்தாப்பா..உங்க யூனியன் தலைவர் பேசுகிறார் பாரு என்றார்... கொடுங்கப்பா என்றேன்........ சார். நான் SRMU சேலம் பிராஞ்ச் secratary பேசறேன்....இவர்தான் உங்க சித்தப்பா என்று எங்களுக்குத் தெரியாது .இவர் எங்களுக்கு ரொம்ப நாளாத் தெரியும்..இவர் ஒரு சமூக சீர்திருத்த வாதி..சமூக சேவகர். நல்ல நல்ல பகுத்தறிவு சார்ந்த அறிவுரைகளைச் சொல்லுவார். ...எங்களின் பள்ளி ஆசிரியர் இவர்..இவரிடம் படித்த மாணவர்கள் நாங்கள்...உங்களைப் பற்றி..அண்ணன் மகன் சேலத்தில் பணிபுரிகிறார் என்பதை இப்போது தான் சொல்கிறார் என்றுச் சொன்னார்கள் ...மேலும்...சித்தப்பாவிடம் படித்து சேலத்தில் பணியாற்றும் தென்னக இரயில்வே மஸ்தூர் யூனியனைச் சேர்ந்த நண்பர்கள் ...நானும் சித்தப்பாவும் யார் என்பது அறிந்து... அக மகிழ்ந்து பேசினார்கள்.எனக்கும் ... அப்பாவின் மாணவர்கள் என்னோடு ஒன்றாக பணியாற்றுவது பெருமையாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து....சித்தப்பா...ஃபோனில் வந்தார்...இப்படி என்னிடம் படித்தவர்கள்..என்னோடு பணியாற்றியவர்கள்... பழக்கப் பட்டவர்கள்...பக்கத்தில் குடியிருப்பவர்கள்..நண்பர்கள்...என வீட்டிலும்..வழியிலும்...போனிலும். அடிக்கடி..நலம் விசாரித்து பேசுகிறார்கள்...எனக்கு மனம் மலர்ச்சி அடைகிறது...ஆனால்...என் ஒரே மகன் ....மருமகள்.. பேரக் குழந்தைகள்....ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் லண்டனில் இருக்கிறார்கள்...வயதான காலத்தில் மகன் அருகில் இருந்தால்...மனம் எவ்வளவு பலம் பெறும்.. பேரக் குழந்தையின் முகம் பார்த்தால்.. எவ்வளவு ஆறுதல் கிடைக்கும்....மகன் குடும்பத்தாரும் ..மகள் குடும்பத்தாரும் என்னுடன் இருந்தால் .. என்ன ஒரு பெருமை... என்ன ஒரு நிம்மதி... என்ன ஒரு ஆதரவு...தைரியம்...அது... இந்த வயதான காலத்தில் எனக்கு வாய்க்க வில்லையே... பணத்துக்காக...பையன் வெளிநாட்டில் ....இங்க பணத்துக்கு என்னக் குறை...நாலு வீடு வாடகை வருது ..விவசாயத்துக்கு நிலம் இருக்கு..எனக்கு மாதம் மாதம் பென்சன்...இந்தப் பணம் போதாதா... பணமா....பெரிது... பாசத்துக்கு...ஒவ்வொரு வினாடியும் நாங்க ஏங்கித் தவிக்கிறோம் . பையன் முகத்தைக் காணத் துடிக்கிறோம்... வருசத்துல ஒரு வாரமோ..பத்து நாளோ லீவில் வீட்டுக்கு வந்தா..வந்த நாள் கொஞ்ச நேரம் பேசறது தான். மீதி நேரம் லேப் டாப் பிலும்..செல்போனிலும்...நண்பர்களிடம் பேசி தீர்த்து விடுவார்கள்..இன்னும் உள்ள நாட்களில் மாமனார் மாமியார்...மச்சினன் வீடு என்று சென்று... காலத்தை ஓட்டிட்டு..நாளைக்கு பிளைட் பிடிக்கணும் என்பார்கள்... அதுக்கு ள்ளவா.....என்று பெத்த வயிறு பாசத்தால் ..எதும் வெளியே சொல்லாமல் பற்றி எரியும்...... இதுக்கெல்லாம் காரணம் ..மகன் படித்த படிப்புத் தான்..அந்தப் படிப்பு என் மகனை என்னை விட்டு பிரித்து விட்டது.அந்தப் படிப்பு என் மகனை வெளிநாட்டுக்கு கொண்டு போய் விட்டது.எங்களை பிரித்ததே அந்தப் படிப்புதான்......இந்த தள்ளாத வயதில்...என் வயிற்றுப் பையன் என் அருகில் இல்லாமல்.. தவிக்கிறேன் ...அன்றைக்கு .. பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிக்கச் சொல்லி இருந்தால்..என் பையன் இன்று ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து என்னோடு கூடவே இருந்து இருப்பான்.சொன்னவர் அப்படியே சிறிது நேரம் மௌனம் ஆனார்.. எனக்கு இதைக் கேட்டதும்..கொதிக்கும் எண்ணெய் யை முகத்தில் அள்ளி வீசியதுப் போல .... சுள்ளேன்று வலித்தது. இப்பொழுதெல்லாம்....மகனும் மருமகளும் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்...பங்களா வீடு..காரு... கை நிறைய சம்பளம்... பணத்துக்கா பஞ்சம் ..அவங்களுக்கு என்னக் குறை என்று...பெருமைபடும் ... பெற்றவர்களின் நடுவே.... வெளிநாட்டில் பிள்ளைகள்...எங்கள் தொல்லை தாங்காமல் ...எங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்கள்...என்று புலம்பும்..வயோதிக பெற்றோர்கள் ஒரு புறம்....உங்க சொத்தும் வேண்டாம்...பணமும் வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..என்று ஒதுக்கி வெளிநாடு சென்ற பிள்ளைகளால். பரிதவிக்கும் பெற்றோர்கள் ஒரு புறம்... ...பெத்த பிள்ளைகள் இருந்தும் நாங்க அனாதைகளாகத் தான் வாழ்கிறோம் என்று தினம் அழும் பெத்த மனசுகள் தான் .எத்தனை... எத்தனை ... இப்படி பெத்த மனசுகள்... பெற்ற வயிறுகள்...வயதான காலத்தில் ... கடைசிக் காலத்தில்... நம் பிள்ளைகள் .. நம்மைக் கைக் கொடுத்து ...கைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள்.. நம் அருகில் இருந்து ஆதரவாக நம்மை காப்பார்கள்....என்று எவ்வளவு ஒரு நம்பிக்கையோடு வளர்த்து இருப்பார்கள்..அவர்களின் எதிர்பார்ப்பு ...கனவு ...நிராசையாகி போய்க் கொண்டு இருக்கிறதே... ...பெற்றவர்களின் பாசத்தை விட...பணத்துக்காக...பெற்றவர்களை தவிக்க விட்டு...பிரிந்து..பறந்து போய் வெளிநாட்டில் வாழும் வாழ்க்கை.. பாசத்தின் முன்னால் ஒரு தூசாகத் தான் தெரிகிறது.. வயதான காலத்தில் பெற்ற குழந்தைகளின் பாசத்துகாக ... பக்கத்தில் இருந்து..அப்பா ...அம்மா..என்று அழைக்கும் பிள்ளைகளின் அந்த அன்பு வார்த்தைகளை...காதில் கேட்பதற்காக.... தாத்தா..பாட்டி என்று கொஞ்சிக் கூப்பிடும் பேரக் குழந்தைகளின் பாச குரல்களைக் கேட்பதற்காக.....எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமல்..... எதுவும் இருந்தும் எல்லாம் இல்லாமல்......தவிக்கும் இந்த பெற்ற இதயங்களை எண்ணும் போது நெஞ்சம் நெருப்பாய் எரிகிறது.... 10.04.2025. " சேலம் வசந்த் "
.
வசந்த், மனதை நெகிழவைக்கும் பதிவு.
ReplyDelete