ராகம்

திறமையின் வெளிப்பாடு அதன் உச்சம் தொடும்போது தான் தெரியும்..                                 திறமையின் வெளிப்பாடு..தொடர் முயற்சியினால் ...பயிற்சியினால் வெற்றி பெருகிறதா என்றால்...அது இயற்கைத் தந்த வரம் என்றேச் சொல்லலாம்..                                   அப்படி ஆளுமை கொள்ளும் திறமை அவரின் வாரிசுகளுக்கும் வரும் என்று உறுதி படுத்த முடியாது.                        அரசாங்கப் பதவி என்றாலும் .. அறிவியல் துறை என்றாலும்...வணிகத் துறை என்றாலும்..விளையாட்டுத் துறை என்றாலும்... விவசாயம் என்றாலும்.. விண் ஆராய்ச்சி என்றாலும்... சினிமாத் துறை என்றாலும் . இவைகளில் உச்சம் தொட்டவர்களின் வாரிசுகள்....அந்த அளவுக்கு வெற்றிப் பெற முடியவில்லை...    ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் அந்த வாரிசுகளால் தொடர்ந்து வெற்றி பெற முடிவதில்லை..மெல்ல மெல்ல மங்கிப் போய் விடுகிறார்கள்...இது கண்கூடாக நடக்கும் நிகழ்வு.    ஆனால் இதில் இருந்து விலக்கு... சிங்கர் ராகவன் அவர்கள்...                என் நாலாவது சித்தப்பா திரு.பெருமாள் அவர்களின் மகன் தான் இந்த ராகவன்.                பெருமாள் சித்தப்பா...கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் instructor ஆகப் பணியாற்றியவர்.          மகாத்மா காந்தியின் திருக் கரங்களால் திறந்து வைக்கப்பட்ட.   மேதகு ...ராஜாஜி அவர்களின் மேற்பார்வையில் வழி நடத்தப்பட்ட..சென்னை...நந்தனம் டக்கர் பாபா தொழிற்க் கல்வி நிலையத்தில் சித்தப்பா பெருமாள் அவர்கள் படித்தவர்.                சென்னை நகரத்தில் படித்தவர் என்பதால்...சித்தப்பா மிகவும் ஸ்டைல் ஆக ஆடை அணிந்து கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துவார்.வெள்ளை நிற pant..shirt அணிவதில் விருப்பம் கொள்வார்.                  அப்போதெல்லாம் வெள்ளை வேட்டி ..வெள்ளை முழுக்கைச் சட்டை அணிவது தான்.. இளைய சமுதாயம் முதல் முதியவர் வரை தொடரும் வழக்கம்..                                    இப்போது வீட்டிலும் வெளியிலும் தெருவிலும் லுங்கி அணிவதென்பது அப்பொழுது அறவே இல்லை...இன்றைய வாழ்வில் அனைத்து இடங்களிலும் .பெரும்பாலும் லுங்கி அணிவது ஒரு தேவையாகிவிட்டது.                விளக்குத் திரி போடுவதென்றாலும்...வெளியே வாசலில் வத்தல் காயவைப்பதென்றாலும்.. வெட்டியக் காயத்துக்கு கட்டுப்போடு வதென்றாலும்..குழந்தைக்கு தூளி கட்டுவதென்றாலும்... தலைச் சுமைக்கு சும்மாடு கோலு வதென்றாலும்
... கோமணத்துக்கு துணி தேவை என்றாலும்...அந்த வெள்ளை வேட்டித் தான் பயன்படும்...                                        ஊரில்  pant அணிபவர்கள் யாரும் இல்லாத நிலையில்...பெருமாள் சித்தப்பா...வெள்ளை வேட்டி... முண்டா பனியன் அணிந்துக் கொள்வார்...வெளியே சேலம் அல்லது town செல்ல வேண்டுமானால்...pant..shirt இரண்டையும் ஒரு காக்கித் துணிப் பையில் கசங்காமல் மடித்து வைத்து.. ஊருக்கு வெளியே போடி  நாயக்கன்பட்டி ஏரிக்கரை புளிய மரத்தின் பின்புற மறைவில்.. வேட்டி ..சட்டை மாற்றி pant shirt அணிந்துச் செல்வார்..மீண்டும் ஊருக்கு திரும்பும் போது pant shirt மாற்றி வேட்டிச் சட்டையில் வீட்டுக்கு வருவார்... இவர்  டிரஸ் மாற்றிச் செல்லும் விசயம் ஒரு சில சித்தப்பா க்களுக்கு மட்டுமேத் தெரியும்...என் இரண்டு ஆயாவுக்கும் தெரியும்..              ஆனால் ஆறுமுகத்  தாத்தாவுக்குத் தெரியாது...தாத்தாவுக்கு வேஷ்டி கட்டத்தான் பிடிக்கும்..தமிழர் உடை...தமிழர் பண்பாடு.. தமிழ்க் கலாச்சாரம்....pant shirt போட்டால் பசங்க வழி மாறிப் போயிடுவாங்க என்று தாத்தாவுக்கு பயம்.                         டக்கர் பாபாவில் படித்து விட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து விட்டு ...வீட்டில் இருந்த நாட்களில்...மற்ற சித் தப்பாக்களோடு..எனக்கு மொத்தம் எட்டு சித்தப்பாக்கள்.. அப்பா தான்   மூத்தவர்...பெருமாள் சித்தப்பா தாயக் கட்டை உருட்டியும்.. பல்லாங்குழியும் விளையாடுவார்...   வீட்டின் முன் கிழக்கு மேற்காக இருக்கும் நீண்ட வாசலில் ...புங்கை மரத்தின் கீழ் குளிர்ந்த நிழலில் மணிக்கணக்கில் வெங்கிலிச்சான் கற்களைக் கொண்டு விளையாடும் போது....சந்தோசத்தின் வெளிப்பாடாக ..விளையாட்டில் வெற்றிக்காக... உரக்கக் குரல் எடுத்துப் பாடுவார்...                  சித்தப்பா பாடுகிறார் என்றால்..என் தாத்தா வீட்டில் இல்லை..வெளியேச் சென்று இருக்கிறார் என்று அர்த்தம்..                    சித்தப்பாவின் குரல் கர ..கர வென்று உச்சத்தில் ஒலிக்கும்.அப்படி உரக்க பாடும் பாடல்.... முன்னூறு அடி தூரத்தில் இருக்கும் எங்கள் வீட்டின் கதவை வந்துத் தள்ளும்..சத்தம் கேட்டு . அக்காக்களோடு  வெளியே வந்து பாட்டு முழுக்கக் கேட்போம்..சித்தப்பாவின் பாட்டு முடிந்தவுடன்...                                      இய்... என்னாடி இது...என்று.  கேக்.. கேக் . .கே என்று சிரிக்கும் என் பெரிய ஆயாவின் குரல் கேட்கும்.. சின்ன ஆயாவின் சிரிப்பொலியும் அதோடு சேர்ந்து இருக்கும்...என் சின்ன அத்தை குணவதியின் துள்ளலான... கொஞ்சலான சிரிப்புக்  குரலும் கலந்து வரும் ...
மற்றச் சித்தப்பாக்களின் கைத்தட்டல் முடிந்தப் பிறகு... அண்ணா..மறுபடியும் பாடு என்று அத்தை குணவதி கெஞ்சிக் கேட்பது காதில் வந்து விழும்...போதும் ...போதும் இன்னொரு நாளைக்கு..என்று அவர்கள் களைந்துச் செல்லுவதைப் பார்க்க முடியும்.                                      தாத்தாவின் பதினோராவது குழந்தை... கடைசிக் குழந்தை ...என் அத்தை குணவதி. அத்தைக்கு அழகான அந்தப் பெயர் குணவதி என்று ...பெயர் வைத்தது என் அப்பா தான்...                                          அன்பான.... இரக்கமான...பாசமான.. சினேகமான உள்ளத்தைக் கொண்டவர் என் சின்ன அத்தை குணவதி.அந்த காலத்து PUC வரை படித்தவர். நல்ல புத்திசாலி... திறமைசாலி...  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் office superintendent ஆக பணியாற்றியவர்.தற்போது பிரான்ஸ் ல் தன் மகனோடு வசித்து வருகிறார்.   ......வழக்கமாக காலையில் தூங்கி எழுவது ஏழு மணிக்கு மேலதான்...ஆனால் இப்போதெல்லாம் ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிடுகிறது.                          காரணம் டொக்... டொக் என்று அப்பா பசுக்களுக்கு சோளத் தட்டுகளை  கட்டை மீது வைத்து அந்த அதிகாலையிலேயே வெட்டிக் கொண்டு இருப்பார்.            அப்பாவின் வாயிலிருந்து மூன்று தாமரை பிராண்ட் பீடி... புகையை கக்கிக் கொண்டு இருக்கும்.அருகில் வெட்டும் புலி தீப் பெட்டி கிடக்கும்...அப்பாவுக்கு பிடித்த பிராண்ட் இந்த மூன்று தாமரை தான். கணேசா பீடி..தானா பீனா  சொக்களால் பீடி இருந்தபோதும் .. அப்பா அவைகளை விரும்புவதில்லை...                        இந்தப் பீடிப் புகையோடு... சுருட்டு பிடிக்கும் புகையும் கலந்து வர ஆரம்பித்தால்...  மாமா சுக்காப்    
       பையனும் அப்பாவோடு வந்து சேர்ந்து இருக்கிறார் என்று அர்த்தம்... கஞ்சமலை மாமா அழைத்து வந்த   சுக்காப்பையன் மாமா..பசுக்களை பராமரிக்க ....வைத்தியம் செய்ய வருவது வழக்கம் ஆயிற்று..பிரண்டைகளை மூன்றாக முறுக்கி பசுவின் வாயில் திணிப்பதும்... அமுக்கிராம் கிழங்கை வாயில் மெல்ல நுழைப்பதும்... வேப்பந்தலையோடு வெல்லத்தை  தின்னக் கொடுப்பதும்..நலுங்கிய பசுக்களுக்கு இவர் செய்யும் மருத்துவங்கள்.வைத்தியங்கள்...
அன்று இரவு  தூங்கி.       கண்விழித்து வெளியே வந்துப் பார்த்தால்...இவர்களோடு...இன்னொருவர் இருக்கிறார்...                            அது என் அம்மாவின் அப்பா.... குள்ளன் தாத்தா ...ஒரு  ஐந்து அடி உயரம் இருப்பார்.தலை வழுக்கை...இடுப்பில் ஒரு காடா வேட்டி . முதுகைப் போர்த்தி ஒரு வேஷ்டி...அவ்வளவுதான் ..சட்டை அணிவதில்லை...கையில் மூங்கில் தடி...பெருவிரல் வளைந்த காலில் தோல் செருப்பு ... இடுப்பில் ஒரு பெரிய சுருக்குப் பை...வெத்திலை பாக்குப் போட...                                தாத்தா இரவோடு இரவாக... பொடி நடையாக ஓமலூர் பஞ்சாங்கரட்டில் இருந்து ...நடந்தே விடிவதற்குள்... எங்கள் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.                          அம்மா ஒரு ஜான் நீள military metal டம்ளரில் tea ஊற்றி அவர்களுக்கு கொடுத்தார்.                                மீசையை விரல் வைத்து மேலேத் தூக்கி குடிக்கும் போது தான் குள்ளன் தாத்தா எங்களைப் பார்த்தார்... அவருக்கு பல் முழுதும் விழுந்து விட்டது .. பொக்கை வாய்...அதை மறைத்துக் கொண்டு இருந்தது அந்த மீசைதான்.                                                  டீ யை  மடக் ...மடக் என்று குடித்தவர்.. வாயை சப்பிக் கொண்டு..என்னை அணைத்து மடிமீது உட்கார வைத்துக் கொண்டார்...எத்தனாவது படிப்பு என்றார்..                                      மூணாவது  தாத்தா என்றேன்...                சுருக்குப் பையில் இருந்து எடுத்த  மூனு பைசாவை என் சட்டைப் பையின் ஜோப்பியில் போட்டார்...    சரி... என்று தலையை ஆட்டினார்..    அவரின் மீசை உதட்டின் மேல் ...பறவை சிறகடிப்பதைப் போல அசைந்தன.                                      குள்ளன் தாத்தா...ஒரு  வாரத்துக்கு மேல் இருந்து விட்டு ..வந்தது போலவே இரவோடு இரவாக சென்று விட்டது அடுத்த நாள் காலையில் தான் எங்களுக்குத் தெரிந்தது.                                     குள்ளன் தாத்தா இருந்த அந்த நாட்களில் சுற்றுப் பகுதியில் இருந்த ஒரு சிலரை நண்பனாக்கி எங்கள் வீட்டிற்க்கு வந்து போகும் அளவுக்கு மாற்றி இருந்தார்.       அவர்களில் ஒருவர் திரு.தங்கராஜ் அவர்கள்.                                  இப்பொழுதெல்லாம் பசுக்களை  ...பராமரிக்க  மாமா சுக்காப்பையனோடு அவரது பெரிய மகன் திரு.தங்கராஜ் அவர்களும் வீட்டிற்க்கு வர ஆரம்பித்தார் .                   திரு.தங்கராஜ் அவர்கள்...              ஆறடி உயரத்திற்கு மேல் உள்ளவர். சுருள் சுருளாக தலை முடி இருக்கும்.மேலே வாரி ஒரு மடக்கு மடக்கி தலை சீவி இருப்பார்.ஒல்லியான உடம்பு.சிவந்த நிறம். நெற்றியிலே திருநீற்று பட்டை...புருவத்தின் நடுவில் சந்தனப் பொட்டிட்டு அதன் நடுவில் சிகப்பு குங்குமம் வைத்து இருப்பார்...வெள்ளை வேஷ்டி ... சட்டை...வேறு உடை அணிவதில்லை. கடவுள் பக்தி நிறைந்தவர்.அடிக்கடி பழனி கோவிலுக்குச் சென்று வருபவர்.                                               சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து ..குளிர்ந்த கிணற்று நீரில் குளித்து...அருகில் இருக்கும் ஏரிக் கரை அரச மரத்தடி விநாயகரை வணங்கி வருவார்...சேலம் செவ்வாய் பேட்டையில் ...ஒரு வெள்ளி நகைகள் செய்யும் பட்டறையில் வேலை செய்து வருபவர்.                                                         ஒரு நாள் பனங்காட்டில் கரும்பு வெட்டியப் பிறகு சுக்காப்பையன்மாமா ஒரு பச்சைக் கிளியை கொண்டு வந்தார். கரும்புக் காட்டில் பிடித்ததாகச் சொன்னார்.அதன் பச்சை நிறமும்  சிவந்த  மூக்கும் பார்க்க மிக அழகாக இருந்தது .அதன் காலில் கட்டிய நூலை என் கையில் கொடுத்து பிடித்துக் கொள்ளச் சொன்னார்.நூலை  பிடித்தப் போது கிளி பட..பட வென வேகமாக இறக்கையை அடித்தது.நான் பயந்து நூலை விட்டு விட்டேன்.அது பறந்துப் போய் பக்கத்து வீட்டு அருகில் இருந்த வேப்பமரத்துக் கிளையில் உட்கார்ந்துக் கொண்டு..கீ .. கீ ..என்று கத்தியது...    அப்போது எங்கே இருந்து வந்தார் என்று தெரியாது .திடீரென ..வந்த தங்கராஜ்அவர்கள் .. அந்த வேப்ப மரத்தின் மீது ஏறி கிளியைப் பிடித்து வந்து வீட்டு  வெளிச் சுவருடன் இருந்த ஜன்னல் கம்பியில் நூலை முடித்துக் கட்டினார். கிளி தாவித் தாவி தப்பிக்க முயன்றுக் கொண்டு இருந்தது..     அப்பாவிடம். . .வரங்க..என்று கைக் கூப்பி விடைப் பெற்றார் தங்கராஜ்...அதற்கு முன்னதாகவே   மாமா  சுக்காப்பையன் சென்று விட்டிருந்தார்.                                                  படப் படக்கும் கிளியையும் அதன் குரலின் ஓசையையும் கேட்ட ..சின்னக் குயிலி பெரியம்மா கொண்டு வந்து கொடுத்த எங்கள் வீட்டின் பூனை.. எங்களையும் அந்த கிளியையும் கண்ணை உருட்டி மாறி மாறிப் பார்த்தது.                                           வர ..வர வெள்ளைப் பசு சரிவர தீனி தின்ன நாட்டம் இல்லாமல் இருந்தது...அவ்வப்போது செய்து வரும் மாமா சுக்காப்பையனின் அனுபவ வைத்தியம் சரிப்பட்டு வரவில்லை.               அப்பா...முடிவாக வெள்ளைப் பசுவை ஊருக்கு மேற்கில் கடைக்கோடியில் ..பல ஆடு மாடுகளோடு பெரும் விவசாயப் பண்ணையம் நடத்தி வந்த சிலம்பு வாத்தியார் குடும்பமான. ..  கங்கம்மாள் வகையராவுக்கு விற்று விட்டார் .                               அந்தப் பசு விற்றப் பணத்தை அப்பா கையில் வாங்க மறுத்து விட்டார்..ஆறு மாதமாக வளர்த்தப் பாசம்.                                                  அந்தப் பசுவை... கட்டி இருந்த முழக் குச்சியில் இருந்து அவிழ்த்து அவர்களிடம் பிடித்துக் கொடுத்தவர்  தங்கராஜ் தான்..அவர்தான் அந்தப் பணத்தை வாங்கிவந்து அம்மாவின் கையில் கொடுத்தார்.அதோடு பசுவின் வாலில் இருந்து கொஞ்சம் பிய்த்து எடுத்த ரோமத்தை மாட்டுக் கொட்டாயின் உச்சியில் ஒரு முழ வெள்ளைத் துணியில் கட்டித் தொங்க விட்டார்.                                                            வெள்ளைப் பசு போய்விட்டது .இருப்பது சிந்து மாடும்..சின்னச் சின்ன குஞ்சுகளோடு சுற்றிச் சுற்றி வரும் கோழியும்...கரு நிறத்தில் குட்டி ஈன்ற வெள்ளை ஆடும்.. புசு புசு வென சற்றே பெரியதாக வளர்ந்து இருக்கும் செல்லப் பூனையும் தான்..     இவைகளோடு .. வெள்ளிப் பட்டறை க்கு வேலைக்குப் போன நேரம் போக மீதி நேரங்களில்..அப்பாவோடு ...இவைகளை பராமரிப்பதில் மிகவும் சுறு சுறுப்பாக உதவிப் புரிந்தார் தங்கராஜ்.                                                       வந்தச் செய்தியைக் கேட்டவுடன்... ஓ வென்று அழ ஆரம்பித்துவிட்டார் அம்மா..                                                              ஆறுமுகத் தாத்தாவின் அண்ணன் வீட்டாரும்..சிதம்பரம் வீட்டார்... ஊரின் வடக்கே மேல் வட்டத்தில் வசித்து வந்தனர்.                                               அந்தச் செய்தியை அறிந்த என் அம்மாவின் கடைசித் தங்கை.. அண்ணன் குணசேகரனின்  அம்மா..சின்னப் பிள்ளையும் கத்திக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.                                    எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் இட்டெரிப் பாதையின் கிழக்கே நூறு அடித் தொலைவில் இருந்த என் அம்மாவின் இளையத்தங்கை பழனியம்மாள் ...இந்தச் செய்தியை கேட்டுத் தலைத் தலையாக அடித்துக் கொண்டு கதறி அழுதார்.                           செல்வகுமார் அண்ணனின் அப்பா.. என் அப்பாவின் நேர் தம்பி திரு.நடேசன் அவர்கள்.அவரின் மனைவிதான் என் அம்மாவின் இளையத்தங்கை பழனியம்மாள்.           ஆக இந்த மூன்றுக் குடும்பமும் ....வந்துச் சேர்ந்த உறவுக்காரர்களும் சேர்ந்து புறப்பட்டு விட்டோம்.                     பழையசூரமங்களத்தில் பஸ் ஏறி முத்து நாயக்கன்பட்டியில் இறங்கி...வெள்ளைச் சோளம் காய்த்துத் தொங்கும் வெள்ளாமைக் காட்டின் வழியாக குறுக்கு வழியில் செல்லத் துவங்கினோம்.        வரிசை வரிசையாக பனைமரங்கள் தலை தூக்கி நின்றன.. கொட்டை ஆமணக்குச்  செடிகள் பனையின் பாதி உயரத்துக்கு வளர்ந்து இருந்தன .. ஒரு சில பனையின் கீழ் ஒரு சிலர்  கை விரல்களை சுருக்கியது போல செய்த  மட்டையில் வாய் வைத்து குடித்துக் கொண்டு இருந்தார்கள்..அவர்களின் வாயில் இருந்து நீர் போல வழிந்து சிந்தியது.. எதிரே வந்த ...கிழக்கில் இருந்து மேற்கே ஓடிய அந்த ஓடையில் முழங்கால் அளவுக்கு நீர் ஓடிக்கொண்டு இருந்தது.                   வந்தப் பெண்கள் ...முழங்காலுக்கு மேலே சீலையைத் தூக்கி ...இடுப்பில் குழந்தைகளை சுமந்து .. காலை எட்டி வைத்து ஓடையைக் கடந்தார்கள்..    என்னை ஒருப் பக்கம் செல்வ அண்ணனும் மறுப் பக்கம் குணசேகரன் அண்ணனும் ஆளுக்கொருக் கையாக தண்ணிரில் இழுத்து கரைமேல் விட்டார்கள்.                 அந்த செட்டிப்பட்டி பஞ்சாங்கரடின் மேலே ஏறும் போது.. நாயனம்.  தப்பட்டை..உறும்பி.. துடும்பு... இவைகளின் அதிர்வான ஓசை பயத்தை ஏற்படுத்தியது ..                                             இறந்துப் போன குள்ளன் தாத்தாவைப் பார்த்ததும் எனக்கு பயமாக இருந்தது... அம்மாக்கள்...உறவினர்களின் அழும் ஓசை இன்னும் பயத்தை அதிகரித்தது. எப்போதும் சிரித்து பேசும்  அம்மாவின் அழகு முகம்.... அழும்போது பார்க்க முடியாத அளவில் இருந்தது.                        குள்ளன் தாத்தாவின் மனைவி தாண்டாயி.... ஆறுமுகத் தாத்தாவின் சகோதரி..என் அப்பாவும் சித்தப்பாக்கள்   இருவரும் தன் அத்தை மகள்களையே   மணம் முடித்துக் கொண்டார்கள்.           எல்லாம் முடிந்து மூன்று மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது.இன்னும் அம்மாவின் முகம் பழைய முகமாக மாறவில்லை.      ஒரு சில வார்த்தைகள் மட்டுமே அம்மா பேசினார்                                       எனக்கும் குள்ளன் தாத்தாவின் நினைவு வந்து ..வந்துப் போனது..    மடிமீது உட்கார வைத்துக் என் சட்டைப் பைக்குள் மூணு பைசாவை குள்ளன் தாத்தா போட்டது நினைவுக்கு வந்தது.அந்த மூணு பைசாவை எடுத்துச் சென்று ஊர் சேந்துக் கிணறு  எதிரில் இருக்கும் மிளகாய்காரர் கடையில் பட்டாணி வாங்கக் கொடுத்தபோது...காதில் தங்ககடுக்கன் அணிந்து இருக்கும் கடைக்காரத் தாத்தா ...என் சட்டை ஜோப்பியில் ஒரு கை நிறையப் பட்டாணியை அள்ளிக் கொட்டி நிரப்பி...வாயைத் திறக்கச்  சொல்லி மீதி உள்ளதைக் கொட்டி ..இன்னும் மீதியுள்ளதை வலது கையில் நிறப்பி அனுப்பினார்.                                பட்டாணி கடிப்பதற்கு மெதுவாகவும் மணமாகவும் சுவையாகவும் இருந்தது..                                     வீட்டிற்குச் சென்றபோது அக்காக்கள்... தம்பி எனக்கு... என்றப் போது...அவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.                  இப்படி குள்ளன் தாத்தாவின் நினைவு வரத்தான் செய்தது.                                                     அன்று செட்டிபட்டி பஞ்சாங்கரடில் இருந்து வந்து இருந்த... என் தாய்மாமன் திரு.கணேசன் அவர்களோடு அம்மாவும் அப்பாவும் ஏதோ ஒரு  முக்கியமான விசயத்தைப் பற்றி பேசுவதாகத் தெரிந்தது.                காலம் சென்ற குள்ளன் தாத்தாவின் விசயம் என்று நினைத்தால்..அது குள்ளன் தாத்தாவின் சத்திய வாக்கு..              என் பெரிய அக்காவின் கல்யாணத்துக்காக குள்ளன் தாத்தாவின் ஆசியுடன் கூடிய அருள் வாக்கு என்பது தெரிய வந்தது.               ஆனால் இந்தக் கல்யாணத்தை என் அப்பாவின் அப்பா ஆறுமுகத் தாத்தாவும் ... எட்டு சித்தப்பாக்களும் சம்மதிக்க வில்லை.அப்படி எங்கள் பேச்சை மீறி கல்யாணம் செய்தால் நாங்கள் யாரும் வரமாட்டோம் என்று அவர்கள் சொன்னதாக அப்பா சொன்னார்.                                   இதனால் என் அப்பாவும் அம்மாவும் என்ன செய்வது என்று தடுமாறிப் போனார்கள் .                                         ஒரே பையனும் ஐந்து பெண்களும் பெற்ற என் பெற்றோர்...ஒவ்வொரு  பெண்ணுக்கும் காலா காலத்தில் கல்யாணம் செய்து ...பையனுக்கு எந்தக் கஷ்டமும் வராம பாத்துக்கணும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.                                   ஆகவே இது என் மகளின் திருமணம்..என் மாமனார் குள்ளன் தீர்மானித்த முடிவு. வாக்கு கொடுத்து விட்டு இறந்து விட்டார்.அதைத் தவர விடக் கூடாது என்று அப்பா ... இந்தத் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டார் ...                                    பெரிய அக்கா தனபாக்கியத்தின் திருமண ஏற்பாடுகளை  வேகமாகச் செய்ய ஆரம்பித்தார்.                                  குள்ளன் தாத்தா இங்கு இருந்த காலத்தில் .. கூட ..மாட ..உறுதுணையாக .. அப்பாவுக்கு உதவி செய்து வந்த முருக பக்திமான்...எந்த கெட்டப் பழக்கமும் இல்லாத.. கெட்ட நண்பர்கள் இல்லாத...பொறுப்பும்.. பொறுமையும்..சுறு சுறுப்புமாக .. நல்லப் பிள்ளையாக.....செயல் பட்ட திரு.தங்கராஜ் அவர்களுக்கு ..என் பெரிய அக்கா பாக்கியத்தை திருமணம் செய்து விடுங்கள் என்று குள்ளன் தாத்தா உறுதி சொல்லி விட்டு இறந்து விட்டார்.               அவரின் வாக்கைத் தட்டாமல்...மேலும் தங்கராஜுவை... அப்பா அம்மாவிற்கும் ஏற்ப் புடையதாக இருந்ததால்.. துணிந்து தன் ...தந்தையார்..தம்பிமார்களின் பேச்சையும் மீறி கல்யாணம்  செய்து கொடுக்க முடிவு செய்து. உடனடியாக திருமண வேலைகளில் இறங்கினார் அப்பா.                                                  நீண்ட அகன்ற மண் வாசலில் பச்சை பந்தல் அமைக்கப்பட்டு அருகில் உயரமாக இருந்த வேப்பமரத்தின் உச்சிக் கிளையில் ... தேவகி சவுண்ட் சிஸ்டம் ...loud speaker.   நான்கு புறமும் கட்டப்பட்டு...கடவுள் பக்தி பாடல்கள் முதல்... சினிமா பாடல்கள்.என... பகல் இரவு முழுக்க ..கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஒலி பரப்பப் பட்டன.                                 இப்படி திருமண நிகழ்ச்சிகளில் ... ஒலி பரப்பப்படும் பாடல்கள்...    பக்தி..காதல்.. தத்துவம்...மகிழ்ச்சி...சோகம் ...சிரிப்பு..வெற்றி .. இழப்பு..ஏக்கம் கேலி ..கிண்டல்.. இன்பம்  ..துன்பம்..என மனிதனின் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவைகளை...எதார்த்தமாக உணரரும்படியாக இருக்கும்...                  பெரிய அண்ணன் military சென்று  நம்மை படிக்கத் தூண்டியவர்..முதல் முதலாக அவரின் பெரிய மகளுக்கு திருமணம் செய்கிறார்..அவரின் விருப்பம்..தன் மகளின் திருமணத்தை யாருக்கு செய்ய வேண்டும் என்பது .. திருமணம் செய்விக்க..கூடாது என்றுச் சொல்ல இவர்களுக்கு என்ன இருக்கிறது என்று நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு ...வானில் பறந்து வரும் பாடல்களை ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டு இருந்தவர் தான் என் சித்தப்பா திரு.பெருமாள் அவர்கள்.அப்படி அவர் கேட்டப் பாடல் அவரை யாருக்கும் தெரியாமல் ..எங்கள் வீட்டிற்கு வரவழைத்து விட்டது.                                                             அப்பொழுது எல்லாம் ரேடியோ mike set வீட்டு நிகழ்ச்சிகளில் பாடுகிறது என்றால் ...வீட்டில் மின் வசதி இருந்தாலும் சரி.   இல்லை என்றாலும் சரி .. கரண்ட் கட் மணிக் கணக்கில் இருக்கும் . போன power வந்தாலும் வரும்.. போய் அடுத்த நாள் வரலாம் என்ற நிலையில் இருக்கும்..மின்சாரம் வருகிறது.. போகிறது என்பதைப் பற்றி கண்டுக் கொள்பவர் யாரும் இல்லை..மின்சாரத்தின் பயன்பாடு அப்போது மிகக் குறைவு..                           சேலம் town பகுதியில் இருந்து தான் ரேடியோ செட் குதிரை வண்டியில் வரும் .. ஊருக்குள் குதிரை வண்டி நுழையும் போதே ஊர் பயலுகளும் குதிரை வண்டியை வரவேற்று நிகழ்ச்சி நடைபெறும் வீடு வரை வந்து ..ஒலி பரப்பை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைப்பார்கள்.          குதிரை வண்டியில் இருந்து..இரண்டு பெரிய பேட்டரிகள்...நான்கு கூம்பு speaker கள்..இரண்டு mike set stand..மரப்பெட்டியில் record  players...இசைத்தட்டு....ஒரு சின்ன டப்பாவில் குண்டு ஊசி போன்ற பின்கள்...சுருட்டி கட்டப் பட்டு இருக்கும் கேபிள்...ஒயர்கள்... ஆம்பிளிபயர்....இவைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து ....உயரமான மரங்களில் speaker கட்டி....விநாயகனே வினை தீர்ப்பவனே...பாடல் முதல் பாடலாக இசைக்கப் படும்...                              அதன் ஓசை இரண்டு மைல் தொலைவில் இருப்பவர்களுக்கு கூட கேட்கும்..                                         இவ்வாறு காற்றில் மிதந்து வரும் அந்த பல சுவை கலந்த பாடல்களை அவரவர் கேட்டு ரசித்துக் கொண்டு இருப்பார்கள்.அந்த பாடல்களில் வரும் கருத்துக்கு ஏற்ப..கதாநாயகியாக வோ..கதாநாயகனாகவோ ..அதன் பாத்திரமாகவோ தங்களை நடிக்க வைத்துக் கொண்டு இருப்பார்கள்..தங்களின் வாழ்க்கையில் ...குடும்பத்தில் நடந்ததாகவே எண்ணி கண்ணீர் வடிப்பார்கள்.                                                  இந்த மண்ணில்..இந்திய மண்ணில்...மொழி தாங்கிய தமிழ் மண்ணில் ..நம் மக்கள்....இன்றும் மனம் வெறுக்காமல் தன் வேலை உண்டு.. தன் குடும்பம் உண்டு...என்று வாழ்நாளை அமைதியாக  ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால்...இந்த இசைப் பாடல்கள் நம்முடைய  ஒவ்வொரு  செயலுக்கும்.. அசைவுக்கும் தரும் ஆறுதல் தான் காரணம்..அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையை அலசி ... நம்மை அரவணைத்து ஆதரவாக.. அழைத்துச் செல்வது தான் காரணம்.                           வீட்டுத் திண்ணையில் ...ரேடியோ செட் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சுற்றிலும் சிறுவர்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள் ...மணப் பந்தலின் உள்ளே வந்த சித்தப்பா பெருமாள் அவர்கள்...mike set போட சொன்னார்..ஒரு பாடல் பாடுவதாக சொன்னதால் மைக்கை சித்தப்பாவின் கையில் கொடுத்தார்கள்.     அப்பொழுதெல்லாம் நாள் முழுக்க பாடும்.. பாடல்களின்  ஒலிப்பரப்பின் இடையே யாராவது வந்து தங்களுக்கு பிடித்த பாடலை... தங்களுக்கு தெரிந்த ராகத்தில் மைய்க்கில் பாடுவார்கள்...அதையும் ரசிப்பார்கள்...பாராட்டவும் செய்வார்கள்.. பழிப்பவர்களும் உண்டு.                                                              அந்த அமைதியான மாலைநேரம் மயங்கி ..இரவு சூலும் நேரத்தில்... பூ உறங்குது...பொழுது உறங்குது.நான் உறங்கவில்லை ... காற்று உறங்குது ...கடலும்  உறங்குது நான் உறங்க வில்லை என காத்திருந்த என் சித்தப்பா ...தன் கர ...கரப் பான குரலில் மிக மென்மையாக ஒரு  பாடலை பாடி முடித்தார் ..             நல்லாப் பாடுறிங்க..குரலும் ராகமும் நல்லா இருக்கு..இன்னும் ஒரு பாட்டுப் பாடுங்க என்று ரேடியோ ஓட்டுபவர் சித்தப்பாவைக் கேட்டுக் கொண்டார்..                                 அப்போது பந்தலின் வெளியே இருந்து என் ஆறுமுகத் தாத்தாவின் குரல் கேட்டது.                     டேய்..யாரழ்ல அவன்... ரேடியாவுல  பாடினவன்..என்று அதிரடியாக உள்ளே நுழைந்தார்...                இடுப்பில் வேட்டி மட்டும் தான் இருந்தது .வலது கையில் நீண்ட மூங்கில் ..தடி ...யார்ராவன் பாடியது என்று ரேடியோ ஓட்டுபவரை அடிக்கப் போனார்.அவர் வீசிய வீச்சு ..... மண் தரையை பள்ளம் பண்ணியது...அவ்வளவுதான் ...கையில் இருந்த மைக்கை சித்தப்பா போட்டு விட்டு ..தாவி வெளியே ஓடி மறைந்தார்..                                       தாத்தா ஆவேசத்துடன்... யார்ரா அவன் .. யாரூட்டுப் பையன் அவன்... என்று எங்களை விசாரித்தார்... நாங்கள்  வெட.. வெட வென்று நடுங்கிப் போனோம்..                                அவன் எங்க வந்து .. யாரப் பாத்து.. என்னப் பாட்டு பாடினான் என்று...சத்தம் போட்டார்.                   அந்த இருட்டும் ..வெளிச்சமும் கலந்த சூழலில்  ....  தாத்தாவால் சித்தப்பாவை அடையாளம் காண முடியவில்லை..எப்படி அவன் அந்தப் பாட்டப் பாடினான்... என்று கத்தி விட்டுப் போனார் தாத்தா.                                                        பெருமாள் சித்தப்பா பாடுவதில் வல்லவர் என்பது நன்றாகத் தெரிகிறது.அவர் பாடிய பாடல் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளச் செய்கிறது.. கோபப்படவும் செய்கிறது என்பது உறுதியாகிறது.                                               இவ்வளவு திறமையாகப் பாடும் பெருமாள் சித்தப்பாவின்  மகன்..சிங்கர் ராகவன் .. இப்பொழுது பாட்டுக் கச்சேரி முதற் கொண்டு..facebook.... யூ ட்யூப் சேனல்களில்... திறமையாகப் பாடி லட்சக்கணக் காண  ரசிகர்களை வசப் படுத்தி வருகிறார் என்பது... இன்றைய பிரபல செல்வாக்கு மிக்க இசை வாரிசுக்களிடையே.. போட்டியை ஏற்படுத்தி உள்ளது..             ஒன்பது பிள்ளைகளைப் பெற்ற ஆறுமுகத் தாத்தாவின்  ஐந்தாவது மகன் ..பெருமாள் சித்தப்பா பாடிய பாடல்....       ஒரே ஒரு ஊரிலே     ஒரே ஒரு ராஜா.. அந்த ஒரே ஒரு ராஜாவுக்கு ஒன்பது பிள்ளை... https://youtu.be/m1HLmCCNkdA?si=xL15uU9e5KhF1hke                                                                                                                                        " சேலம் வசந்த் "
( https.. யை அழுத்திப் பிடித்து மேலே வரும் ஓபன் பட்டனை அழுத்தவும்)

Comments

Popular posts from this blog

ஆத்மா

நாராயணி கண்ணகி.